சுதிப்டோ சென் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் விமர்சனங்களை இங்கு பார்க்கலாம்.
படத்தில் எல்லோரும் எதிர்க்கும் அளவிற்கு ஏதும் இருக்கிறதா என்றால் ஆம் நிறையவே இருக்கிறது. ஒரு மதத்தினரை குறிவைத்து தாக்க முழுக்க முழுக்க வன்மத்தோடு எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தை வெளியிட ஆதரவாக இருக்கும் கருத்து சுதந்திரம், பிபிசி குஜராத் டாகுமெண்ட்ரிக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என்ற கேள்வி பரவலாக இணையம் எங்கும் கேட்கப்பட்டு வருகிறது.
சுதந்திர நாடு ஒவ்வொரு தனி மனிதரின் படைப்பிற்கும் சுதந்திரம் உண்டு என்றால் ஒரு சில படைப்புகளை வெளியிட விடாமல் அரசு தடுப்பது ஏன்?, அது அவர்களின் ஆட்சிக்கு களங்கம் விளைவித்து விடும் என்பதினாலா? என்பது அனைவரின் மனதிலும் உதிக்கும் கேள்வி, இந்திய நாடு இங்கு அனைவரும் சமமாக மதிக்கப்படல் வேண்டும் என்ற கருத்துக்கள் அரசியல் அமைப்புகளிலேயே இருக்கும் போது ஆளும் அரசு ஒரு சார்ந்த அமைப்பாக செயல்படுவது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படத்தை படமாக பாருங்கள் என்றால் அது படமாக இருந்தால் பார்க்கலாம், படம் முழுக்க முழுக்க ஒரு மதத்தினரின் மீது கொட்டும் வன்மமாக இருந்தால் அதை எப்படி படமாக பார்க்க முடியும்?, பெரும்பான்மையினர் கொண்டாட சிறுபான்மையினரை தாழ்த்தி காட்ட வேண்டுமானால் அது ‘தீண்டாமை’ என்பதனுள் தானே சேரும். அப்படி தான் என்றால் ஆளும் அரசுகள் தீண்டாமையை ஆதரிக்கின்றனரா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்ற கருத்தை பல இணையவாசிகளும் முன்வைத்து வருகின்றனர்.
“ இங்கு கருத்துக்களுக்கு சுதந்திரம் உண்டு, ஆனால் ஒரு சாரரை உயர்த்தி, இன்னொரு சாரரை தாழ்த்தி உருவாக்கப்படும் கருத்துக்களுக்கு நிச்சயம் இடம் இல்லை, மக்களிடையே போலியான கருத்துக்களை தற்போதைய காலக்கட்டங்களில் திணிக்க முடியாது என்பதை இது போன்ற படம் எடுப்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும் “