பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு தலைவலி இன்னும் தொடர்கிறது. கோபி படுக்கையறையில் படுக்காமல் ஹாலில் படுத்திருப்பதைப் பற்றி ஈஸ்வரி விசாரிக்கிறார். பின்னர் கோபி சமாளித்துவிட்டு ஈஸ்வரிக்கு தானே காபி போட்டு கொடுப்பதாக கூறுகிறார். கோபியின் காபி படு கேவலமாக இருப்பதால் ஈஸ்வரி திருவென்று விழிக்கிறார். கோபி நடை பயிற்சிக்கு சென்ற பின் அந்த காபியை கொட்டி விட்டு திரும்புகிறார். திரும்பினால் அங்கு ராதிகாவும் அவரது தாயாரும் நின்று சிரிக்கிறார்கள்.
ஈஸ்வரி கடுப்போடு நடைப்பயிற்சி செல்கிறார். அங்கு ஈஸ்வரியை ராமமூர்த்தியும் பாக்யாவும் பார்க்கிறார்கள் இருவரும் அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்கள். பாக்யாவிடம் ஈஸ்வரி இன்னும் கோபமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார். நமக்கோ பாக்யாவின் மேல் ஏன் அவர் கோபமாக இருக்கிறார் என்பது புரிபடவே இல்லை. இதற்குப் பின் ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி உணவுக்கு கஷ்டம் உறங்குவதற்கு கஷ்டம் என கோபி வீட்டில் தான் சந்திக்கும் கொடுமைகளை கூறிவிட்டு கமலாவை அனுப்பாமல் வரமாட்டேன் எனவும் கூறுகிறார். இதைப் பற்றி தெரிந்து கொண்டு தான் உணவு கொண்டு வரலாமா என பாக்யா கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
பின்னர் பாக்யாவிற்கு பக்கத்துக் கடை பார் உரிமையாளர் அவரது கடை திறப்பு விழாவுக்கு அழைப்பு கொடுக்கிறார். அனைவரும் இங்கு பார் வந்தால் பிரச்சனைகள் வரும் என பயமுறுத்த பாக்யா செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார். எழில் அமிர்தாவிடம் தன்னுடைய கதை பெரிதாக திரைப்படமாக வரப்போவதை பற்றி பேசி மகிழ்கிறார். அனைத்து பிரச்சனைகளும் இனி சரியாகிவிடும் எனது தாயை நான் பெருமைப்படுத்துவேன் என கூறுகிறார்.