பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Review | ’பஞ்ச நாணயத்தால், சூடு கொண்டு அனல் தெறிக்கும் பிக்பாஸ் களம் ‘

Bigg Boss 5 Tamil Day 16 Review

Bigg Boss 5 Tamil Day 16 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய முழுமையான காட்சிகள், எழுத்துகளின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, இங்கு தொகுக்கப்பட்டு இருக்கிறது. முழுவதும் படித்து, எழுத்துக்களின் வடிவில் காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.

அதிகாலை 4:30, பிரியங்கா, நிரூப், அபிஷேக் குழுவின் உரையாடலுடன் துவங்குகிறது பதினாறாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சிபியை ஏன் தலைவராக வழி மொழிந்தேன் என்பதற்கான காரணத்தை பிரியங்கா அவர்கள், அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் கூறிக் கொண்டு இருக்கிறார். அதாவது ‘சிபி ஒரு பெரிய த்ரெட்லாம் இல்ல, இருந்தாலும் சிபிய ஜெயிக்க வச்சு, ராஜூவ நாமினேசனுக்கு விட்டு பார்த்து, எத்தன பேர் அவன நாமினேட் பண்ணுறாங்கன்னு, பாக்கலாம்னு நினைச்சேன், ஆனா நாமினேசன்லயே அவன் இல்ல, அவனுக்கு ஹவுஸ்ல சப்போர்ட்ஸ் இருக்கு, அவன் தனியா தெரியுறான், சீன் போடல, எந்த சண்டைலயும் இன்வால்வ் ஆவல, சப்போஸ் அவன் நாமினேட் ஆகி இருந்தாலும் கூட மறுபடியும் வோட்டிங் மூலமா உள்ள வந்திருவான்னு தெரியும்’னு ராஜூ குறித்த நல்ல புரிதலோட பேசுறாங்க பிரியங்கா. என்ன, இதெல்லாம் பிரியங்கா சொல்ல சொல்ல, சினிமா பையனுக்கு தான் வயிறு எரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கும். ராஜூ ஒரு வலிமையான போட்டியாளர்னு ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே உணர ஆரம்பிச்சிட்டாங்க. அதுனாலயே அவருக்கு எதிர்ல எதுவும் செய்யாம, பின்னாடி நின்னு ஒரு சிலர் நரித்தனம் பண்ணுறாங்க இந்த அபிஷேக் மாறி ஆட்கள். அவங்களுக்குலாம் ஒன்னே ஒன்னு தான் சொல்லனும். ’ஏன் அடுத்தவன் தோற்கனும்னு நினைச்சே விளையாடுறீங்க, நீங்க ஜெயிக்கனும்னு நினைச்சு விளையாடுங்களேன்’ என்பது தான். இசைவாணி தொடர்ந்து தன் கஷ்டங்களை மட்டும் முன் வைத்து விளையாடுவதாக பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். தொடர்ந்து இசை குறித்த உரையாடலே நீளுகிறது. அதன் பின் காட்சி அகல்கிறது.

’சின்ன மச்சான்,என்ன புள்ள, என் செவத்த மச்சான், சொல்லு புள்ள’ என்ற ராஜலட்சுமி-செந்தில் பாடலுடன் பிக்பாஸ் ஹவுஸ் இனிதே விடிகிறது. விடியல் பாடலுக்கு ராஜூவும் -தாமரையும் இணைந்து ஆடிய நடனம் செம்ம. சின்ன பொண்ணு அம்மா தொடர்ந்து ’யாரும் பேசினாலும் பேசுவதில்லை’ என்ற அவரின் குழப்பத்தை மறுபடியும் முன் வைக்கும் போது, அண்ணாச்சி புகுந்து ‘அம்மா, நீங்க வீட்ல எப்புடி இருந்தீகளோ அது மாறியே இருங்க, சின்ன சின்ன விஷயத்துக்காக மாறிக்கிட்டே இருக்காதீக, யாரும் பேசலன்னும் வருத்தப்படாதீக, இங்க உள்ள யாருக்குமே உங்கள பிடிக்கலன்னாலும், நீங்க நீங்களா இருந்தீகன்னா, வெளில பாக்குறவங்களுக்கு உங்கள பிடிக்கும்’ என்று ஆறுதல் உரைத்து அவரின் குழப்பத்தை தீர்த்து வைத்தார். அதற்கு பின் ஸ்கிரிப்ட் ரைட்டர் ராஜூவிடம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் நம்ம இமான் அண்ணாச்சி. பெரிதாக அந்த காட்சிகளில் ஏதும் இல்லை. ராஜூ இன்ஸ்ட்ரக்சன் சொல்ல சொல்ல, அண்ணாச்சி நடிப்பதாக, சிரித்துக் கொண்டே அழுது கொண்டும், அழுது கொண்டே சிரித்துக் கொண்டும் இருக்கிறார். பார்வையாளர்கள் ஆன நமக்கு தான் அந்த காட்சியை பார்த்து சிரிப்பும் வரவில்லை அழுகையும் வரவில்லை. அத்தோடு அந்த காட்சி அகல்கிறது.

பின்னர் அடுத்த டாஸ்க் ஓலை பிக்பாஸ்சிடம் இருந்து வருகிறது. இமான் அண்ணாச்சி அதை எடுத்துரைக்கிறார். இது ஒரு லக்ஸ்சுரி பட்ஜெட் டாஸ்க், இதுவரை எந்த பிக்பாஸ்சிலும் இல்லாத அளவிற்கு, சலுகைகள் இந்த பிக்பாஸ் இல்லத்திற்கு கிடைக்க காத்திருக்கிறது. ’நாமினேசனில் பெயர் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வது, மேலும் அவர்களின் நண்பர்கள் நாமினேசனில் இருந்தாலும் கூட அவர்களையும் சேர்த்து காப்பாற்றிக் கொள்வது போன்ற அரிய சலுகைகள் இந்த டாஸ்க்கின் கீழ் இடம் பெறும்’ என்று அறிவிக்கிறார் அண்ணாச்சி. டாஸ்க்கின் பெயர் ‘பஞ்ச தந்திரம்’. இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்படும். ஐந்து கண்ணாடி பெட்டிகளில் பஞ்ச பூதங்களை குறிக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று பொறிக்கப்பட்ட விலை மதிப்பில்லா நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு நபர் எத்தனை நாணயத்தை வேண்டுமானாலும் கைப்பற்றலாம். ஒரு நாணயத்தை கைப்பற்றியதும் அந்த நபர் அருகில் இருக்கும் கேமராவிடம் அதை காண்பித்து ‘யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டேன்’ என்று பிக்பாஸ்சிடம் அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எடுத்தவருக்கு அந்த நாணயம் சொந்தமாகும். ஒருவேளை ஒருவர் நாணயத்தை எடுக்கும் போது ஹவுஸ்மேட்டிடம் பிடிபட்டாலோ மாட்டிக்கொண்டாலோ, அதை எடுத்த இடத்திலேயே வைத்து விடல் வேண்டும். மேலும் பிடிபட்டவருக்கு பாதாளச்சிறையில் சிறிது காலம் தண்டனையும் கிடைக்கும். சிறையில் இருந்து மீண்டு விட்டால் மீண்டும் அந்த நாணயத்தை எடுக்க முயற்சிக்கலாம்.

’பஞ்ச தந்திரம்’ போட்டி விதிமுறைகள் : காலை, மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் நாணயத்தை எடுக்கலாம். போட்டிக்கு நேரம் காலம் இல்லை, எந்த நேரத்திலும் நாணயத்தை எடுக்க முயற்சிக்கலாம். பிக்பாஸ்சிடம் இருந்து அறிவிப்பு வரும் வரை இந்த டாஸ்க் தொடரும். மேலும் எந்த நேரத்திலும் டாஸ்க்கில் எதிர்பாராத மாற்றங்களும் பிக்பாஸ்சால் அறிவிக்கப்படலாம் என்று கூறி முடிக்கிறார் அண்ணாச்சி. ‘எவ்ளோ பெரிய மாத்திரை’ங்கிற மாறி எவ்ளோ பெரிய டாஸ்க் ஓலை, படிச்சு முடிக்கிறதுக்கே ரெண்டு எபிசோடு வேணும் போலயே.

பஸ்சர் அடிக்கிறது. டாஸ்க் துவங்குகிறது. இயாக்கி, அண்ணாச்சியின் உதவியுடன் முதல் நாணயத்தை கார்டனில் எடுக்கிறார். பாத்ரூமில் சென்று அறிவித்து விட்டு அங்கே உள்ள பகுதிகளிலேயே ஒளித்து வைக்கிறார். அடுத்த நாணயத்தை அபிஷேக் எடுக்கிறார். சமையல் அறையின் கேமரா முன் அறிவித்து விட்டு, பக்கத்தில் இருக்கும் பிரிட்ஜ் அருகில் ஒளித்து வைக்கிறார். அடுத்து ஒரு நாணயத்தை மதுமிதா எடுக்கிறார். கார்டனில் இருக்கும் இன்னொரு நாணயத்தை வருண் எடுக்கிறார். பாத்ரூம் கேமரா அருகில் சென்று எடுத்ததை அறிவிக்கிறார். பவ்னி தன்னிடமும் ஒரு நாணயம் இருப்பதாக தாமரையிடம் சொல்கிறார். இயாக்கி பாத்ரூமில் வைத்த நாணயத்தை அக்‌ஷாரா எடுத்து விட்டதாக வருண் மற்றும் ராஜூவிடம் சொல்கிறார். அலாரம் அடிக்கிறது. பிக்பாஸ் அறிவிப்பு வருகிறது. ‘இரண்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, மூன்று நாணயங்களை காணவில்லை’ என்ற அறிவிப்பை வெளியிடுகிறார் பிக்பாஸ். அவர் சொல்வதில் இருந்து புரிந்து கொள்ள முடிவது இரண்டு நாணயங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு, முறையாக கேமரா முன்னும் பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதி மூன்று நாணயங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், எடுக்கப்பட்டவரிடம் இருந்து களவு செய்யப்பட்டிருந்தாலும் கேமரா முன்பு காண்பிக்கப்படாததால், எடுத்தவர்கள் அதை சொந்தமாக்கி கொள்ள முடியாது. தொடர்ந்து அது கேமரா முன்பு காண்பிக்கப் படாத வரை, காணாமல் போனதாகவே கருதப்படும்.

இதற்கு இடையில் மது தான் எடுத்த நாணயத்தை இன்னமும் கேமரா முன் பதிவு செய்யவில்லை. அதற்குள் இசையும், பிரியங்காவும் அந்த நாணயத்திற்கு போட்டி போடுகின்றனர். மது, கடைசியில் அதை பிரியங்காவிடம் ஒப்படைக்கிறார். பிரியங்கா சமையலறையில் இருக்கும் கேமரா முன்பு அதை பதிவு செய்கிறார். அங்கு இருக்கும் ஒரு ட்ராவிற்குள்ளேயே அதை ஒளித்தும் வைக்கிறார். பின்னர் ஒளித்து வைத்த இடம் பாதுகாப்பானது இல்லை என அறிந்து கொண்டு மறுபடியும் அதை பிரியங்கா எடுத்து, கேமரா முன் காண்பித்து தனக்குள் வைத்துக் கொள்கிறார். பின்னர் பெட்ரூம்க்கு சென்று தனது பொருள்கள் இருக்கும் பெர்சனல் பேக்குகளில் அதை ஒளித்து வைத்துக் கொள்கிறார். மீண்டும் பிக்பாஸ் ’கேமரா முன்பு காமிக்கப்படாத நாணயங்கள் தொடர்ந்து காணாமல் போனதாகவே கருதப்படும்’ என்ற அறிக்கையை விடுக்கிறார். அதை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்சின் உரையாடல் கொஞ்ச நேரம் நீளுகிறது. அவர்களின் உரையாடல்களை கூர்ந்து பார்க்கையில் பெரும்பாலானோர் காப்பாற்ற முயல்வது, தாமரையை தான். அதற்கு அடுத்து வேண்டுமானால் சின்ன பொண்ணு அம்மாவை யோசிக்கிறார்கள். பிரியங்கா அபிஷேக்கை காப்பாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. இதற்கு இடையில் பவ்னி தான் கார்டன் பகுதியில் தான் ஒளித்து வைத்த நாணயத்தை கைப்பற்றி பாத்ரூமில் இருக்கும் கேமராவில் தான் எடுத்ததாக பதிவு செய்கிறார்.

இப்ப ராஜூ என்ட்ரி ’டேய் இந்த கேம் எப்படி விளையாடனும்னு சத்தியமா எனக்கு புரிலடா’ன்னு அபிஷேக் கிட்ட சொல்லிட்டு இருக்காரு. ஆமாங்க இந்த கேம்ல என்ன என்ன நடக்குதுன்னு சத்தியமா பார்வையாளர்களாகிய எங்களுக்கும் சுத்தமா புரில. இதற்கிடையில் தான், இயாக்கி ஒளித்து வைத்த இடத்தில் இருந்து கைப்பற்றிய நாணயத்தை கேமரா முன் பதிவு செய்கிறார் அக்‌ஷாரா. ஆக மொத்தம் அபிஷேக், வருண்,பிரியங்கா, பவ்னி, அக்‌ஷாரா இவர்கள் தான், இல்லத்தின் காட்சிகளை பார்த்தவரையில், கேமரா முன்பு பதிவு செய்து முறையாக ஐந்து நாணயத்தையும் வசப்படுத்தி உள்ளதாக, இது வரை தெரிகிறது. யாவரும் தாமரையை காப்பாற்ற போவதாக சொல்வது, நாணயத்தை எடுப்பதற்காக மட்டுமா, இல்லை உணமையிலேயே அந்த நாணயத்தின் மூலம் அவரை காப்பாற்றுவார்களா என்பது தெரியவில்லை. காரணம் மூன்று நாணயம் எடுக்கப்படும் போது தாமரை அதை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அவர் நினைத்தால் சத்தமிட்டிருக்கலாம். ஆனால் ராஜூ சொன்னது போலவே, தாமரை கண்முன் நாணய அபகரிப்பு நடைபெறும் போதெல்லாம் ‘உஷ்.. எல்லாம் உனக்காக தான்’ என்று கூறி ஆப் பண்ணி விட்டால் எப்படி தாமரை கத்துவார்.

இதற்கு இடையில் அக்‌ஷாரா ஸ்டோர் ரூமில் ஒளித்து வைத்த நாணயத்தை, லாவகமாக பவ்னி எடுத்து தனக்குள் ஒளித்து வைத்துக் கொண்டார். பவ்னி ஸ்டோர் ரூமில் இருந்து வெளி வந்ததை பார்த்த அக்‌ஷாராவும், வருணும் நாணயம் பறி போனதை அந்த நிமிடமே உணர்ந்து கொண்டனர். தற்போது பவ்னியிடம் இரண்டு நாணயம் கையிருப்பு இருக்கிறது. வருண் தன்னை பாலோ செய்வதை உணர்ந்து கொண்ட பவ்னி, அபினய்யின் உதவியுடன் ஏற்கனவே தான் கார்டன் ரூமில் ஒளித்து வைத்திருந்த அதே இடத்தில் மறுபடியும் ஒளித்து வைக்கிறார். அதற்கு பின் இந்த காட்சி அகலுகிறது. பின்னர் நள்ளிரவில் நிரூப் தனியாக, பவ்னி நாணயத்தை ஒளித்து வைத்த இடத்திற்கு கரெக்டாக சென்று, இரண்டு நாணயங்களையும் கைப்பற்றுகிறார். இதை அபினய் பார்த்து விட்டார். பார்த்து விட்டு கண்டுக்காமல் விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பார்த்து விட்டு முறையிட்டால் ரூலின் படி நாணயங்கள் எடுத்த இடத்திலேயே வைக்கப்பட வேண்டும். அது மட்டும் இல்லாமல் எடுத்தவருக்கு பாதாளச்சிறை தண்டனையும் உண்டு. அபினய் அவ்வாறே நிரூப் எடுத்ததை பார்த்துவிட்டதாக முறையிட, அபினய்-நிரூப் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெறுகிறது. சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த இடைவெளியில் பவ்னி இன்னொரு நாணயத்தை கைப்பற்றி கேமரா முன் பதிவு செய்கிறார். அது அபிஷேக் ஓளித்து வைத்தது என்று நினைக்கிறேன்.

இதற்கிடையில் பிக்பாஸ்சிடம் இருந்து ஒரு அறிவிப்பு வருகிறது. ’நிரூப் எடுத்த அந்த இரண்டு நாணயங்களையும், சிபி கைப்பற்றி மறுபடியும் அந்த கண்ணாடி பாக்சினுள் வைத்திடல் வேண்டும். மேலும் நிரூப் அவர்கள் பிக்பாஸ்சின் அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும் பாதாளச்சிறையினுள் அடைக்கப்பட வேண்டும்’ என்பதே அந்த அறிவிப்பில் இருந்தவைகள். அதன்படி நிரூப் சிறையினுள் அடைக்கப்படுகிறார். நாணயங்கள் எடுத்த கண்ணாடி பாக்ஸ்களுக்குள்ளேயே வைக்கப்படுகின்றன. சிபி, அபினய், ராஜூ, அண்ணாச்சி என யாவரும் உள்ளிருக்கும் போதே கண்ணாடி பாக்ஸ்சினில் இருந்த ஒரு நாணயத்தை பவ்னி, சுருதியின் உதவியுடன் லாவகமாக கைப்பற்றுகிறார். அதை பவ்னி, சுருதியிடம் மாற்றும் போது ராஜூ பார்க்கவே, அதை சிபியிடம் முறையிடுகிறார். ஆனால் தாங்கள் மாற்றியதை யாரும் பார்க்கவில்லை என்று சுருதியும், பவ்னியும் முறையிடுகின்றனர். ஆக மொத்தத்தில் அங்கும் ஒரு சல சலப்பு, விவாதம் முற்றுகிறது. அத்தோடு எபிசோடும் நிறைவடைகிறது.

“ ஹைலைட்ஸ்: பஞ்ச நாணயங்கள் இல்லத்தில் வந்ததில் இருந்தே, யார் யார் குழுவாக இருக்கிறார்கள் என்ற உண்மை எல்லாம் தெரிய வருகிறது. அபினய் பவ்னியின் பக்கம் அதிகம் சாய்கிறார். அபிஷேக்-பிரியங்கா, அக்‌ஷாரா-வருண் என்று ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தவர்களை கையில் வைத்துக் கொண்டு குழுவாக கேமை விளையாடுவதால், கேம் சுவாரஸ்யம் அற்றதாக ஆகிவிடுகிறது “

About Author