பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Review | ’பிரியங்கா கூட ஒட்டுனா தான், என் மூஞ்சு டிவில தெரியும்னா நான் அதையே பண்ணிட்டு போறனே ‘

Bigg Boss 5 Tamil Day 17 Review

Bigg Boss 5 Tamil Day 17 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்சயம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.

அதிகாலை 02:10, அபிஷேக்கின் கண்மூடித்தனமான ஒரு டாக்டிக்ஸ்சுடன் துவங்குகிறது பதினேழாம் நாளிற்கு உரிய எபிசோடு. கார்டன் ஏரியாவில் இருக்கும் ஒரு நாணயத்தை இசை, இயாக்கி, தாமரை, சின்ன பொண்ணு என யாவரும் சூழ்ந்திருக்கும் போது எடுக்கிறார் அபிஷேக்.
’இத இப்ப எடுத்து நான் ஜெயில்குள்ள இருக்குற நிரூப் கிட்ட கொடுத்து பாதுகாப்பா வச்சுக்க சொல்ல போறேன்’ என்று அபிஷேக் கூறவே ‘நான் சொல்லுவேன், நான் சொல்லுவேன்’ என கொந்தளிக்கிறார் இசை. எல்லாரு வாயையும் ஆப் பண்றதுக்குனே ஒரு டையலாக் வச்சிருப்பாறே அது என்ன, ஆஹ்ன் வருது வருது, அவரு வாய்ல இருந்தே அந்த டையலாக் வருது. ‘உனக்காக தானடி வச்சிட்டு இருக்கேன், கேமே விளையாடாம நைட் புல்லா உக்காந்து காயின பார்த்துட்டே இருக்க போறியா’ என்று கூறி இசையின் வாயை அடைக்கிறார். அபிஷேக் எடுத்த நாணயத்தை ஜெயிலுக்குள் இருக்கும் நிரூப்பிடம் கொடுக்க நிரூப் அதை ஜெயிலின் அறைகளுக்குள் ஒளித்து வைக்கிறார். பின்னர் ஒரு வழியாக இசைக்கு ஞானம் பிறக்கவே ‘எங்க கேம நாங்களே விளையாண்டுக்குறோம் ப்ரோ, எங்களுக்கு யாரு மேலயும் நம்பிக்க இல்ல’-ன்னு சொல்லிட்டு, நிரூப் கிட்ட அபிஷேக் கொடுத்த நாணயத்தை திரும்ப கேட்கிறார். அவர் தருவதாய் இல்லை. அபிஷேக்குடன் வந்தால் திரும்ப தருவதாய் சொல்கிறார். பின்னர் அந்த காட்சி அகல்கிறது.

இசை ஹவுஸ்மேட்ஸ்சிடம் நடந்ததை நேரடி வாக்குமூலம் கொடுத்தது, அபிஷேக்கிற்கு தெரியவே, ஏதோ இவர் மட்டும் தான் உள்ளே ஸ்மார்ட் கேம் விளையாடுவது போல எண்ணிக் கொண்டு, இசை மேல் உள்ள கோபத்தில் ’ஏய் குழந்தையல ஏன்டா வேலைக்கு எடுக்குறீங்க’ என்று காட்டு கத்து கத்தி பிக்பாஸ் இல்லத்தையே ஒரு நிமிடம் அதிர வைக்கிறார். இதே நேரத்தில் நிரூப் பிரியங்காவை அழைத்து அவரிடம் இருக்கும் அந்த நாணயத்தை கொடுக்க முயல்கிறார். அதை வருண் பார்த்து விடவே, ‘நான் பாத்துட்டேன், பாத்துட்டேன், நிரூப் பிரியங்கா கிட்ட நாணயத்த கொடுத்தத பார்த்துட்டேன்.’ என்று கத்தி காட்டிக் கொடுக்கிறார். அது மட்டுமில்லாமல் நாணயத்தை பிரியங்கா வாங்கி அவருக்குள் மறைத்து வைத்துள்ளதாகவும் வருண் சொல்கிறார். ஆனால் பிரியங்கா அவருக்குள் மறைத்து வைக்கவில்லை, வருணின் சத்தம் கேட்டதுமே வாங்கிய நாணயத்தை ஜெயிலுக்குள்ளே போட்டு விட்டார் பிரியங்கா. இதற்கிடையில் நேற்றைய எபிசோடில் சுருதியும், பவ்னியும் இணைந்து எடுத்த ஒரு நாணயத்தை சிபி எடுத்த இடத்திலேயே வைக்க முறையிடுகிறார். சுருதியும் அதை கேட்டு ஏற்றுக் கொண்டு தனக்குள் மறைத்து வைத்திருந்த அந்த நாணயத்தை எடுத்து கண்ணாடி பாக்ஸ்சினுள் வைக்கிறார். அதற்கு பின் ஒரு அறிவிப்பு வருகிறது. ’சுருதி நாணயத்தை எடுக்கும் போது ஹவுஸ்மேட்ஸ் அதை பார்த்து முறையிட்ட காரணத்தினாலும், பிரியங்கா, நிரூப்பிடம் இருந்து நாணயத்தை வாங்கும் போது, வருண் அதை பார்த்து முறையிட்ட காரணத்தினாலும், பிரியங்காவும், சுருதியும் பாதாளச்சிறைக்கு செல்ல வேண்டும்’ என்பதே அந்த அறிக்கையில் இருந்தவைகள்.

இதற்கிடையில் சுருதி தன்னிடம் இருந்த இன்னொரு நாணயத்தை சிபியிடம் ஒப்படைக்கிறார். பிரியங்கா தன்னிடம் இருந்த நாணயத்தை உள்ளே கொடுத்து விட்டதாக சொல்கிறார். பின்னர் நிரூப்புடன் சேர்ந்து சுருதியும், பிரியங்காவும் பாதாளச்சிறைக்கு செல்கின்றனர். இதற்கிடையில் வருண், ராஜூ, அண்ணாச்சி என மூவரும் தன்னை சூழ்ந்திருக்கும் போதே தாமரை, கார்டனில் இருக்கும் நாணயத்தை எடுக்கிறார். அபினய் அதை பார்த்து விடவே, தாமரை தன்னிடம் இருந்த நாணயத்தை பயந்து வருணிடம் கை மாற்றி விடுகிறார். கடைசியில் அபினய், ’தாமரை நாணயத்தை எடுத்ததை பார்த்தேன். ஆனால் அதை வருணிடம் மாற்றினாரா என்பதை பார்க்கவில்லை’ என்பதை பதிவு செய்கிறார். டாஸ்க் ஆரம்பிச்சு இவ்ளோ நேரம் கழிச்சு இப்ப தான் கேமையே தாமரை ஆரம்பிச்சாங்க, அதுக்குள்ளயும் அபினய் அவங்களுக்கு எண்ட் கார்டு போட பாக்குறாரு சோ சேட். இதுக்கு இடைல தாமரைகிட்ட இருந்து வாங்கின நாணயத்த வருண் பெட் ரூம்ல கொண்டு ஒளிச்சு வைக்கிறாரு. அப்புறம், நம்ம கருத்தான அபிஷேக் கார்டன் ஷோபால உக்காந்துகிட்டு, பிரியங்கா நிரூப் கிட்ட ஒரு சில கருத்துக்கள சொல்லிட்டு இருக்காரு. அதுல ராஜுவையும் இழுக்க, ‘நீ ராஜூவ பத்தி பேசுறத மொத நிறுத்து’ன்னு பிரியங்கா சொல்ல, பல்பு வாங்கி தனது டாப்பிக்கை வேறு பக்கம் திசை திருப்புகிறார் அபிஷேக்.

இந்த நிலையில் உள்ளே சிபி ஒரு சித்து வேலையை செய்ய ஆரம்பிக்கிறார். அபினய், மது, இசை, ராஜூ என யாவரும் சூழ்ந்திருக்க ’இப்புடி பேசிட்டே இருந்தா வேலைக்காகாது, எதாவது ஒன்னு பண்ணியே ஆகனும். அதுனால இந்த நாணயத்த(நெருப்பு) நானே எடுத்துக்கிறேன், தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்கலாம்’ என்று சொல்லி நாணயத்தை(நெருப்பு) எடுத்து கேமரா முன்னும் பதிவு செய்து கொள்கிறார். அதற்கு பின் சிபி, தாமரையை அழைத்து, பெட்ரூமில் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் மற்றுமொரு நாணயத்தை(காற்று) எடுத்து பதிவு செய்யும்படி வலியுறுத்துகிறார். தாமரையும் அந்த நாணயத்தை(காற்று) எடுத்து அங்கிருக்கும் கேமராவில் பதிவு செய்து கொள்கிறார். பெரும்பாலானோர் காப்பாற்ற முயல்வது தாமரையைத் தான் போல. ஒரு வேளை டாஸ்க் இப்போதே முடிக்கப்பட்டு ’யார் காப்பாற்ற பட வேண்டும்’ என்று பிக்பாஸ் கேட்டால் பெரும்பாலானோரிடம் இருந்து தாமரை என்ற பதில் தான் வரும் போல. இதற்கிடையில் சிபி தன்னிடம் இருக்கும் நாணயத்தை(நெருப்பு) இசையை தனியாக கூப்பிட்டு அவரிடம் ஒப்படைக்கிறார். இசையும் அதை வாங்கி கொண்டு பாத்ரூம் பகுதியில் இருக்கும் கேமராவில் பதிவு செய்து கொள்கிறார். இதற்கு பின்னர் சைரன் அலாரத்துடன் பிக்பாஸ்சின் அறிவிப்பு வருகிறது. ‘ஐந்து நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்பதே அந்த அறிவிப்பு. இதற்கிடையில் ‘எல்லார்கிட்டயும் நல்ல பேர் எடுக்கனும்னு நெனைக்காத, தனக்குன்னு ஒன்னு வேணும்னா ரெண்டு பேரயாச்சு பகைச்சு தான் ஆகனும்’ என்று தாமரைக்கு தன்னாலான ஒரு அட்வைஸ்சை மொழிகிறார் ராஜு. அவர் சொல்வதும் சரி தான். எல்லாருக்கும் நல்லவனா இருந்தா தனக்குன்னு இருக்கிறத கூட இழந்து ஆக வேண்டிய சூழல் தான் வரும்.

அதற்கு பின்னர் நிரூப்பின் ஜெயில் தண்டனை காலம் முடிவடைந்ததாக பிக்பாஸ் அறிவிக்கிறார். நிரூப்பும் விடுவிக்கப்படுகிறார். அதிலிருந்து கொஞ்ச நேரத்திலேயே பிரியங்கா மற்றும் சுருதியின் தண்டனைக் காலமும் முடிவடைவதாக அறிவிப்பு வருகிறது. அவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள். இதற்கிடையில் பவ்னிக்கும் அக்‌ஷாராவுக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் நிகழ்கிறது. ’அக்‌ஷாரா என்கிட்ட உங்களுக்கு ஏதும் பிரச்சினையா, என்கிட்ட எதும் பேசனும்னா என் முன்னாடி பேசுங்க, பின்னாடி என்ன பத்தி பேசாதீங்க, நீங்க பேசுறதெல்லாம் எனக்கு தெரியும். சுற்றி கேமராவும் இருக்கு’ என்று அக்‌ஷாராவுக்கு ஒரு பிக் வார்னிங் கொடுக்கிறார் பவ்னி. இதை முழுவதும் கேட்டுவிட்டும் கூட, எதுவும் பெரிதாய் பதில் சொல்லவில்லை அக்‌ஷாரா. அப்படியென்றால் பவ்னி பற்றி அக்‌ஷரா யாரிடம் என்ன சொல்லி இருப்பார். எதையோ சொல்லி இருக்கிறார் என்பது அவரின் பம்மி கொள்ளும் அந்த பேச்சிலேயே தெரிகிறது. இவ்வளவும் நடந்த அங்கு ஏதும் பெரிதாய் பேசாதவர், அந்த வாக்குவாதத்தின் நகலை, ராஜூ, வருண், அண்ணாச்சி முன் எடுத்துச் சென்று பேசிக் கொண்டு இருக்கிறார். அந்த காட்சி அகன்றதும் அண்ணாச்சி, பிரியங்கா இடையே ஒரு உரையாடல் வருகிறது. ’ஒரு கேம் நடக்கும் போது, அது சில நேரங்களில் ஆக்ரோஷமடையும், அந்த நேரங்களில், ஒரு சில வார்த்தைகளை ஒருமையில் மரியாதையின்றி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் அதை தவிருங்கள்’ என்று அண்ணாச்சி பிரியங்காவிடம் முறையிடுகிறார். ஆனால் பிரியங்காவோ அதை ஏற்றுக் கொள்ளாமல் அதை ஒரு விவாதப்பொறுளாக மாற்றி விடுகிறார்.

‘ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமைய்யா’ என்ற பாடலுடன், எப்போதும் 8 மணிக்கு விடியும் பிக்பாஸ் இல்லம், இன்று 9:30 மணிக்கு இனிதே விடிகிறது. தலைவர் பாடல், நடனம் என்று அந்த காட்சி அத்துடன் அகலுகிறது. அதன் பின்னர் நிரூப் தான் ஜெயிலுக்குள் ஒளித்து வைத்த நாணயத்தை மீண்டும் எடுக்கிறார் (பிரியங்கா வருணிடம் மாட்டிக் கொண்ட போது ஜெயிலுக்குள் தூக்கி எறிந்த அந்த நாணயம்). நிரூப் எடுத்த அந்த நாணயத்தை, மீண்டும் பிரியங்காவிடமே ஒப்படைக்கிறார். பிரியங்கா அதை தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்கிறார். அந்த காட்சி அத்துடன் அகலுகிறது. ‘அந்த கும்பல்ட்ட இருந்து ஒன்ன தூக்கனும்டா, அக்‌ஷாரா கிட்ட ஒன்னு இருக்கு, வருண்கிட்ட ஒன்னு இருக்குன்னு’ பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் கூறிக் கொண்டு இருக்கிறார். ’இவன்ட்ட கேட்டா அவன்ட்ட இருக்குன்றான், அவன்ட்ட கேட்டா இவன் கிட்ட இருக்கின்றான்’ ஆக மொத்தம் எது எவன் கிட்ட இருக்குன்னு அவங்களுக்கும் புரில, பாக்குற நமக்கும் புரில. சைடு கேப்ல இசையோட நாணயத்த யாரோ அடிச்சிட்டாங்க போல, கெடைச்சதே ஒன்னு அதுவும் அதுவா கிடைச்சிது. அதுவாவே போகவும் செஞ்சிடுச்சு. இதற்கிடையில் அக்‌ஷரா நாணயத்தை அடிக்க பிரியங்கா-நிரூப்-அபிஷேக் மூவரும் ப்ளேன் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில் செவனேன்னு படுத்துக் கிடக்கும் ராஜூவிடம் மறுபடியும் கருத்துக்களை கத்தி கத்தி முன்மொழிய ஆரம்பித்து விட்டார் அபிஷேக். ‘நாங்க உண்மையா இருந்தாம், நியாயமா இருந்தோம், உண்மைக்கு குரல் குடுத்தோம் அதுனால நாமினேசன்ல இருக்கோம்’ ஏன்பா அபிஷேக் நீ உண்மைக்கு குரல் கொடுத்தேன் உண்மைக்கு குரல் கொடுத்தேன்னு ஊரு புல்லா நான் தான் யோக்கியன்னு காட்டிட்டு இருக்குறதுனால தான்பா நாமினேசன்ல இருக்குற. அத மொத புரிஞ்சிக்கோ.

அபிஷேக் பேசுறதுலேயே ஆயிரம் கன்டன்ட் எடுக்கலாம் போல. அதுனால தான் கதாசிரியர் ராஜூ அவர பேச விட்டுட்டு அவரு பாட்டுக்கு பெட்ல படுத்துட்டு கேட்டுகிட்டே இருக்காரு. ’பிரியங்கா கூட ஒட்டிட்டு இருந்தா தான் என் மூஞ்சி டிவில வரும்னா, நான் அதையே பண்ணிட்டு போறனே, அண்ணாச்சி கூட வாக்குவாதம் பண்ணா தான் நான் டிவில வருவன்னா அதை பண்றதுல என்ன தப்பு’ என்ற அபிஷேக்கின் பொன் மொழிகள் அவரைச் சுற்றி இருக்கும் ஹவுஸ்மேட்சை வியக்க வைக்கின்றன. ஹவுஸ்மேட்ஸ் மைன்ட் வாய்ஸ் ’நீ இன்னும் எங்கள பைத்தியம்னே நெனச்சிட்டு இருக்கல்ல’ அப்படித்தான் இருக்கும். பொதுவா இப்ப ராஜுவ பிரியங்கா, அபிஷேக் குழு சூழ்ந்ததற்கான ஒரே காரணம் அக்‌ஷாராவின் நாணயத்தை கைப்பற்ற தான். ராஜு, அக்‌ஷாராவிற்கு பெரிதும் நெருங்கியவர் தங்கை-அண்ணன் என்பதால், அவரிடம் அக்‌ஷாராவின் நாணயம் பற்றி ஏதாவது ஒரு தகவல் சிக்குமா என்பதை என்ன எல்லாமோ சொல்லி பெறப் பார்க்கிறார்கள். ஆனால் ராஜூ அசைவு கொடுக்கவில்லை. அத்துடன் அந்த காட்சியும் அகலுகிறது. இதற்கிடையில் இயாக்கி தனியாக புலம்பி கொண்டிருக்கிறார். ‘யார் எடுத்தார்கள், யாரிடம் இருக்கிறது என்பதெல்லாம் தெரியும் ஆனால் அடுத்தவர்களுடையதை எடுத்து அபகரிக்க மனம் வரவில்லை’ என்று தனக்குள்ளேயே ஒரு புலம்பலை விதைத்துக் கொண்டு இருக்கிறார்.

ஏதோ பேப்பர், பென், எழுத்து, பாத்ரூம்னு, நியூஸ் கடத்துறதா அக்‌ஷாரா பத்தி ஒரு குற்றச்சாட்டு ஹவுஸ்குள்ள பிரியங்கா மூலமா வருது. பேசினா தான சிக்குவோம் எழுதினா எப்புடி சிக்குவோம்னு நெனச்சிருக்கும் போல அக்‌ஷாரா. ’நாம தான் கத்தி கத்தி பாக்குறவங்களுக்கு கெட்டவங்களா தெரிஞ்சிகிட்டு இருக்கோம், ஆனா இவங்கள பாறேன் சைலண்ட்டா மூவ் பண்ணி நல்ல பேரு வாங்கிக்கிறாங்க’ன்னு அக்‌ஷாரா குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் பிரியங்கா. இப்ப தான் அக்‌ஷாராவோட கேம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது. இத பத்தின வாக்குவாதம் கொஞ்ச நேரம் போய்கிட்டு இருக்க, இன்னொரு பக்கம் பவ்னி-அபினய் மோதல். பவ்னி எப்போதோ வருணிடம் பேசிட்டு இருந்திருப்பார் போல. அத பார்த்த அபினய், பவ்னிய கூப்டு ‘வருண்கிட்ட அவ்ளோ சகவாசம் வச்சிக்காத, வருண் உன்ன பத்தி பின்னாடி தப்பா பேசுறான்’னு சொல்லிருப்பாரு போல. அத வருண் முன்னாடியே போட்டு உடைக்கிறாங்க பவ்னி. ’உன்ன பத்தி என்கிட்ட இப்புடி சொன்னாருடா வருண், நான் எதுனாலும் எதிர்லயே பேசிடுவேன், நேர்லயே பேசிடுவேன் பட் அபினய் அப்புடி இல்ல’ன்னு ஏதோ விடல தேங்காய போட்டு உடைச்ச மாறி, அபினய் அவங்க கிட்ட சொன்ன எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டு இருக்காங்க பவ்னி. இதுக்கிடையில ஏன் இந்த நேரத்துல அக்‌ஷாரா பத்தின உண்மைகள உடைச்சேன்னு பிரியங்கா அண்ணாச்சிகிட்ட சொல்லிட்டு இருக்காங்க. அதாவது ’அக்‌ஷாராகிட்ட ஒரு காயின் இருக்கு. அது இவ்ளோ நேரம் ஆகியும் வெளி வரலன்னா, அத காப்பாத்துறதுக்கு யாரோ அவளுக்கு ஹெல்ப் பண்றாங்க, அதும் அவள பத்தி புரிஞ்சிக்காம ஹெல்ப் பண்ணுறாங்க, அதுனால தான் அவள பத்தி போட்டுடைக்கனும்னு நினைச்சேன். எல்லாரு முன்னாடியும் இந்த உண்மைய சொன்னேன். இப்ப அக்‌ஷாரவ காப்பாத்துறவங்களுக்கு புரிஞ்சி இருக்கும். இப்படி ஒருத்தங்களுக்காக ஹெல்ப் பண்றோம்னு அவங்களே நினைப்பாங்க’ அப்புடின்னு தெளிவா அண்ணாச்சிகிட்ட சொல்லிட்டு இருக்காங்க பிரியங்கா. ஒரு வேள அப்படியும் இருக்கலாமோ, என்று நம்மையும் எண்ண வைக்கிறது பிரியங்காவின் வார்த்தைகள்.

அதற்கு பின்னர் அக்‌ஷாராவின் அழுகை, எதுவுமே புரியாமல் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கும் தாமரை மற்றும் சின்ன பொண்ணு அம்மா என்று அந்த காட்சி கொஞ்ச நேரம் நீளுகிறது. இதற்கு அப்புறம் நிரூப் கேமில் ஒரு டாக்டிக்ஸ் போடுகிறார். ’ஒரு வேளை காயினை அதிக முறை கைப்பற்றியவருக்கு எதும் பவர் கொடுக்கப்படுமோ’ என்ற பாணியில் யோசித்து, பவ்னியின் நாணயத்தை அவரிடம் பேசி சிறிது நிமிடம் மட்டும் வாங்கி கைப்பற்றியதாக கேமராவில் பதிவு செய்து திருப்பி கொடுக்கிறார். அதற்கு பின் தாமரையிடமும் ஒரு நாணயத்தை வாங்கி கேமராவில் பதிவு செய்து அதை மீண்டும் தாமரையிடமே திருப்பி கொடுக்கிறார். அத்துடன் அந்த காட்சி அகல்கிறது. ’பிரியங்காவும் நிரூப்பும் உன்கிட்ட வந்து என்ன சொன்னாங்க’ என்ற அண்ணாச்சியின் கேள்விக்கு, ‘இத சொன்னா வீட்டுக்குள்ள ஏதும் சண்ட வருமோ’ என்ற தாமரையின் வெள்ளந்தியான பதில்களுடன் பிக்பாஸ் பதினேழாம் நாளிற்குரிய எபிசோடு நிறைவடைந்தது.

”ஹைலைட்ஸ்: அபிஷேக்கின் அளாவதிய பேச்சு, பிரியங்காவின் கணிப்பு, நிரூப்பின் டேக்டிக்ஸ், அக்‌ஷாராவின் ரூல் பிரேக், தாமரையின் வெள்ளந்தி, ராஜூவின் ராஜத்தனம் என்று ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொருவரையும் பற்றி விளக்கி கொண்டு தான் இருக்கிறது. எந்த நாணயம், யாரிடம் இருக்கிறது, எங்கு இருக்கிறது என்று இந்த கேம் நம்மை ஒரு வகையில் குழப்பினாலும், இன்னொரு வகையில் பால் எது, தண்ணீர் எது, பாம்புகள் எது என்பதையெல்லாம் இந்த கேம் நமக்கு அடையாளப் படுத்திக்கொண்டு இருக்கிறது. நமக்கு மட்டும் அல்ல அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கும் பிக்பாஸ்சுக்கும் சேர்த்து தான்”

About Author